திருப்பாவை பாடல்- 3
ஓங்கி வளர்ந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராட்டினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகள பூங்குவளை போதில் பொறி வண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் .
பாடலின் விளக்கம் ....
மூன்றடி மண் கேட்டு விண்ணையும் மண்ணையும் சேர்த்தளந்து சகலமும் நானே என்று காட்சியளிக்கும் உலகளந்த பெருமானை வழிபட பாவை நோன்பிருக்க வாருங்கள் என்று அழைக்கின்றாள் கோதை.
மார்கழி மாத பாவை நோன்பில் எம்பெருமானை வணங்கினால், உலகையே அளந்த எம்பெருமான் உங்களுக்கும் பூமி , செல்வம் , செழிப்பு , பொருள் அனைத்தும் கொடுத்து மகிழ வைப்பான். கிடைக்க வேண்டியது நிச்சயம் அவனே அருள்வான் என்ற கருத்தோடு இந்தப் பாடலை பாடுகின்றாள் கோதை.
அதிகாலை குளிரில் உறைந்து நீராடி அம்மானை வழிபட்டால் ஆகாயம் குளிர்வு பெற்று , வானம் மும்மாரி பொழியும் . தெய்வ வழிபாடு என்பது வீட்டுக்கு மட்டுமல்ல ...நாட்டுக்கும் இந்த பூமிக்கும் சிறந்த பலன் கொடுக்கும் எனும் வேதமிக்க கருத்துதனை முன்வைத்து தோழியரை நோன்பிருக்க வாருங்கள் என்று மகிழ்வோடு அழைக்கின்றாள் கோதை .
வானம் மழை பொழிந்தால் நெற்கதிர்கள் செழித்து வளரும். விவசாயம் மேம்படும்.. பசி பட்டினி பஞ்சம் இலாத பூமி அமைந்தால் நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கு அளவேது! வாருங்கள் தோழியரே பாவை நோன்பு மேற்கொள்வோம் என கோதையவள் தோழியரை அன்போடு நோன்பிரருக்க அழைக்கின்றாள்.
மழைப் பொழிவால் நீர்நிலைகள் வயல்வெளியில் நிரம்ப... குளத்தில் வாழக்கூடிய மீன்கள் நிலத்தின் நீர் தனில் துள்ளி விளையாட மகிழ்ச்சியோடு நீந்தி வரும் நிலைதனில் , நாம் ஒரே இடத்தில் இருப்பதை விடுத்து உலக நடப்புகளை சற்றே அறிய வேண்டும் எனும் கருத்துதனை முன்வைத்து நம் கோதையவள் திருப்பாவை பாடி பாவை நோன்பிருக்க தோழியரை அழைக்கின்றாள்.
வண்டுகள் மழையின் வரவை ஆர்ப்பரித்து குவளை மலர்களை நோக்கி வந்து தேன்குடிக்க....பாவை நோன்பு இருந்தால் மன சஞ்சலம் கொண்ட தாம்பத்ய வாழ்க்கையிலும் ஒற்றுமை மேம்படும் என்பதையும் கருத்தில் கொண்டு பாவை நோன்பிருக்க தோழியரை அழைக்கின்றாள் .
அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக பசுக்கள் அனைத்தும் குடம் நிறைக்க பால் சுரக்கும் . காய்ச்சிய பால் சிறிது பொறையோடு உறவாகி தயிறாகி தயிர் கடைய வெண்ணையாகி, வெண்ணை பண்பட்டு நெய்யாகும் பெரும்பேரு நாம் பெறுவதற்கு , அவன் அருளால் மகிழ்வதற்கு ... பாவை நோன்பிருக்க வாருங்கள் தோழியரே அழைக்கின்றாள்.
முடிவில் ஆட்கொள்ள எம்பெருமானே நிச்சயம் வருவான் என்று சொல்கின்றாள் ஆண்டாள் நாச்சியார்.
நீங்காத செல்வமும் பெருகி சிந்தைக் கினிய வாழ்வு பெற தோழியரே நோன்பிருக்க வாருங்கள் என அதிகாலை பொழுதினில் அன்போடு அழைக்கின்றாள் கோதை.
மார்கழி மாதத்தில் அதிகாலை துயில் எழும் அரங்கநாதன் நினைத்து ஆண்டாள் பாசுரம் பாடி வழிபட்டால் அனைவரும் வாழ்வாங்கு வாழ்வார் என்பது நிச்சயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக