தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் எழுந்த வரலாறு
பக்கத்து தோட்டத்தில் பூத்த மலர் மீது ஆசை வைப்பதை விட, நாம் புதிதாக செடி வளர்த்து அதில் பூத்த மலர் தனை நாம் பெற்றால் தனி மகிழ்ச்சியன்றோ!
தஞ்சாவூர் பெரிய கோவில் பெருவுடையார் கோவில், பிரகதீஸ்வரர் கோவில் என பல பெயர்களில் புகழ்பெற்ற திருத்தலம் எழுந்த வரலாறுதனை கேளீர்
இராஜராஜ சோழன் வரலாறு கதையின் சுவையும் சாரமும் இதுபோல்தான். வாருங்கள் பூவின் நறு மணத்தை நாமும் பெறலாம்.
மாறுவேடத்தில் இராஜராஜசோழன். கண்ணாடியில் தன் முகம் பார்க்கின்றான். ஆஜானுபாகுவான உயரம். மங்கையரும் கவரும் வண்ணம் உடலமைப்பு. ரோஜாப்பூ போன்ற சிவந்த நிறத்தவன் நெற்றியில்..
ஆலவாய் அழகனுக்கு பிடித்தமான திருநீறு பட்டை அலங்கரிக்க, சிவனுக்குள் சக்தி அடக்கம் என சொல்வது போன்று அழகாய் குங்கும கீற்று .
சிங்கத்தின் கூர்மையான பார்வை என்பது இதுதானோ! என கனிவும் கண்டிப்பும் நிறைந்த கண்கள். தமிழனுக்கே உரிய மீசை . தலைப்பாகையில் காட்சியளித்த வீரமகன் ஒட்டு தாடியை மெல்ல தொட்டுப் பார்த்துக் கொள்கின்றான்.
யாரும் தன்னை சோழராஜன் என அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என உறுதி செய்த நொடி நகரைச் சுற்றிப்பார்க்க , ராஜநடையை சற்றே மாற்றி நிமிர்ந்தே நடந்தான் அழகாக...
ஆங்காங்கே மக்கள் கூட்டம். சிதறுகின்ற சொற்களை சுவையாய் கோர்க்கின்றான்.
காஞ்சிபுரத்தில் பல்லவன் இராஜசிம்மன் கட்டினான் கோவில் ஒன்று ..(கைலாசநாதர் ஆலயம்) அடடா! சிற்பங்களின் சிலை அழகை வர்ணிக்க வார்த்தை உண்டோ!
காட்டுக்கு அரசன் சிங்கம் என்றால் காஞ்சியை ஆண்ட மன்னன் இராஜசிம்மன் அன்றோ ! இதை உலகம் அறிய வேண்டும் என்றுதான் சிம்மங்களே தாங்கி நிற்கும் கோவில் என அற்புதக் காட்சியை படைத்தான் போலும்! என மக்கள் கூட்டத்தில் ஒருத்தி கவிபாட...
அப்பப்பா! பதினாறு பட்டை திருநீறு போட்ட திருநீலகண்டனோ! பளபளப்பாய் கருப்புக் கல்லினால் ஆன பெரிய திருமேனி லிங்கமாய் காட்சிதந்து சிந்தையிலே ஊடுருவ..
'ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி' என உதடுகளோ உவகையோடு உச்சரிக்க எங்கும் இல்லாத சிறப்புதனை நான் கண்டேன் என்னவென்று நான் சொல்வேன்! காண கண் கோடி வேண்டும்.. என பரவசமாய் மறுபுறமோ மாமி ஒருத்தி அங்கலாய்க்க...
அதுமட்டுமா ! நாராயணனை துதிபாடும் நாரதரே அத்திருத்தலத்தின் புகழ் வரலாறுதனை கேட்டு கைலாசநாதரை காண ஓடோடி வந்து பூஜித்தாரே.. அக்கதையை நீ அறிவீரோ !
பொக்கை வாய் கிழவியின் சொல் கேட்டு அடுத்து இளைஞன் மட்டும் விதிவிலக்கா !அவன் வாய் மலர்கின்றான்..
இறைவன் கைலாசநாதர் என்றால் இறைவி காமாட்சி அம்மன், சப்தமாதர் அஷ்டதிக் பாலகர்கள், ஏகாதச ருத்திரர்கள்' கருட நரசிம்மர், பைரவி என எண்ணற்ற மூர்த்திகள் எங்கும் காணமுடியாத பாக்கியம்!
கைலாசநாதர் ஆலயம் கட்டி இறைத்தொண்டு ஆற்றிய இராஜசிம்மனொடு அவர்தம் மனைவி இரங்கபாதகை சேர்ந்து தொண்டாற்றிய கதையை நீர் அறிவீரோ..
அரண்மனைக்கு வருகின்றான் இராஜ ராஜ சோழன். அன்றே முடிவெடுத்தான் கட்ட வேண்டும் கோவில் ஒன்று.
தஞ்சாவூர் திருத்தலம் புகழ் போற்றும் திருத்தலமாய் , 12 அடி உயரத்தில் பஞ்சபூதங்களும் உள்ளடக்கிய மிகப்பெரிய லிங்கம் கொண்ட திருத்தலமாய்,
கைலாசநாதர் பிரகதீஸ்வரர் என புகழ் போற்றும் பெருவுடையார் கோவில் என புகழ்பெற்ற திருத்தலமாய்...
கட்டிடக்கலை ,சிற்பக்கலை, ஓவியக்கலை ,வெண்கலசிலை கொண்ட கலைகள் அனைத்தும் சிந்தையை ஒன்றிட செய்து 'சிவாய நமஹ சிவாயமே நமஹ'என திருப்புகழ் பாடும் திருத்தலமாய்..
ஒரே கல்லில் அமைக்கப்பட்ட 20 டன் எடை கொண்ட மிகப்பெரிய நந்தி என அனைவரும் போற்றக்கூடிய திருத்தலமாய் ,
நமக்கு எட்டா நிலையிலும் கூட நின்ற இடத்தில் நந்தியின் காதில் ஓதுவோர் அனைவரின் விருப்பங்களையும் சிவன் இடத்தில் கொண்டு சென்று சேர்த்து..
நினைத்த காரியத்தை வெற்றி பெற செய்யும் சக்தி கொண்ட நந்தி என பெயர் பெற்ற திருத்தலமாய்
இக்காலம் எதிர்காலம் என எக்காலமும் மக்கள் போற்றி வழிபடக்கூடிய மிகப்பெரிய புகழ்பெற்ற திருத்தலமாய்..
இராஐராஜன சோழன் எடுத்த உறுதியில் ஆழமாய் அழகாய் எழுந்தது பிரகதீஸ்வரர் ஆலயம்.
காஞ்சியில் ராஜ சிம்மேஸ்வரர் என போற்றப்படும் கைலாசநாதர், தஞ்சாவூரில் பெருவுடையார் என போற்றப்படும் பிரகதீஸ்வரர் இந்த புகழ்பெற்ற திருத்தலங்களை வாழ்க்கையில் நாம் ஒரு முறையேனும் சென்று தரிசித்து ...
பிறப்பு -இறப்பு ஆகிய கடலிலே அழுந்துகின்ற எம்மை-அக்கடலில் அழுந்தா வண்ணம்..
கருணைகையால் கையில் எடுத்து என் அறிவில் தன் சொரூபத்தை காட்சி தந்து அருள்கின்ற எம்பெருமானே!
நான் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் குறை ஏதுமில்லாத- நிறை கொண்ட வாழ்க்கையாக ,மகிழ்ச்சி கொண்ட வாழ்க்கையாக வாழ்வதற்கு அருள் செய்வாயே எம்பெருமானே!
ஓம் நமச்சிவா
என மனதார வேண்டி ...புண்ணியம் பெற்று வாழ்க்கையில் பிறந்த பயனின் நிறைவு காண்போம்.
Copy rights at Balakshitha
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹