ஜாதக பலனை மாற்றக்கூடிய வலிமை
சிவனை நித்தமும் நினைத்தால் நினைத்தது நிறைவேறும் என்பதற்கான வரலாறு
கணித்து சொன்னால் நடவாதது உண்டோ! என பெயர் புகழ் பெற்ற ஜோதிட வித்வான் இடத்தில் அன்பன் ஒருவன் வரிசையில் காத்திருந்தான் மணிக்கணக்கில் ...
பொற்காசு முடிப்பு இல்லையேல் அவரை நெருங்க தான் முடியுமோ! அதனால் பல நாள் முயற்சி செய்து பொக்கிஷமாய் சேர்த்து வைத்த பணம் அல்லவா .. பத்திரமா! என தொட்டு பார்த்தவனின் நேரம் நெருங்கியது ஜாதகமும் இந் நிமிடம் ஜாதகர் கையிலே...
புரட்டுகின்றார் அவனை நிமிர்ந்து பார்க்கிறார் . மீண்டும் புரட்ட, அவனை மறுபடியும் அவனை பார்க்க இப்படியே நேரம் போனது. புரியாத மானிடன் ஜாதகரின் முகத்தையே பார்க்க ' இன்று போய் நாளை வா ' எனும் எதிர்பாரா ஜோதிடரின் பேச்சை கண்டு எதிர் பேச்சு பேசாது கிளம்பிவிட்டான் விரக்தியோடு.
ஜோதிடரின் மௌனத்திற்கு காரணம் என்ன ! யோசிக்க விடாது எதிர்பாராத மழை வர அடைக்கலமாய் கோவில் ஒன்றில் அவன் ஒதுங்க... அந்தோ தன்னிலை போல் சிவனும் தன்னந்தனியாய் கூரை எல்லாம் ஆங்காங்கே தூரிகை இட்டு எம்பெருமானும் நனைய கண்டு அருகே ஓடுகின்றான்.
'அய்யகோ! என் செய்வேன் என்னப்பனே நீர் மழையில் நனையலாமோ ! என் செய்வேன் என தன்னிலை மறந்து மனம் தாளாது மேலாடையை கழற்றி தன் ஆடையால் மழையை தடுக்கின்றான். தன் நிகரில்லா மனம் பெற்றான்.
'இக்கோவில் தளம் நான் அமைப்பேன் அதற்கு செல்வம் சேர்க்கும் வழி என்ன! கொத்தனார் யார் ! கட்டுமான பணிக்கு தேவைகள் என்ன! ' என சிந்தித்துக்கொண்டே பொழுது கழிய, மறு பொழுது புலர ஜாதகரின் வீட்டில் அன்பனவன்.
எதிர்பாரா அவன் முகம் கண்ட ஜோதிட வித்வானோ' நேற்றோடு அவன் இறந்து போவான் என என் கணிப்பு பொய்யானதா! ' ஆவல் மேவிட அவன் ஜாதகத்தை மீண்டும் பிரித்தார் .
என்னே ஆச்சரியம்! ஜாதகத்தின் எண்கள் கட்டம் கணிப்பு அத்தனையும் மாற்றம். நீண்ட ஆயுள் பெற்ற காரகன் திருப்பணிபுரியக்கூடிய உத்தமன் என்ற அமைப்பை கண்டு நடந்தது என்ன ! என்று கேட்க, விவரித்தான் அன்பன் .
ஆரத் தழுவிக்கொண்டார் ஜோதிட வித்வான் 'மார்கண்டேயன் அன்று இன்று அவனாக உன்னைக் காண்கின்றேன் இறைவன் அருள் பெற்ற நேசா ' என ஆரத்தழுவிக் கொண்டார் .
கோவில் கட்ட மனதால் நினைத்த அக்கணமே அவனுடைய பாவங்கள் கரைந்தன. புண்ணிய பலன்கள் கூடின . திருப்பணி அவன் கையால் நடந்தது .பொருட்செல்வம் வளம் பெற்று புகழ் யாவும் அவன் பெற்று நூறாண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.
காலம் போடும் கணக்கை அவனன்றி மாற்றத்தான் முடியுமோ! நல்லவே நினைத்து, நலமே காண இறைவன் வழி நாம் நடப்போம்.
மனதால் கோவில் கட்ட நினைத்ததற்கே இறைவன் மனம் கனியும்பொழுது இறைவனுக்காக கோவில் திருப்பணிகளுக்கு நம்மால் முடிந்த கொடையளித்தால் மகிழ்வது இறைவன் அன்றோ!