ஆண்டாளின் திருப்பாவை பாடல்- 4
ஆழி மழை கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடுஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து பாழியற் தோளுடைய பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உரைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் .
பாடலுக்கான விளக்கம்.
ஆழிமழைக்கண்ணா ! என வருண பகவானை அழைக்கின்றாள் கோதை.
வருணனே வருக .. ஆழ்கடல் நீர் எடுத்து , மேகவண்ணன் கண்ணன் நிறம் போன்று கருமேகம் சூழ , மின்னுகின்ற சுதர்சன சக்கரம் போல் கண்ணைப் பறிக்கும் மின்னலும் , பரமாத்மாவின் கையில் இருக்கும் சங்கு முழங்குதல் போல்.. பயங்கர இடி சத்தத்துடன் ...
மாயக் கண்ணனின் சார்ங்கம் போல், விடாமல் தொடரும் அம்பினால் சரமழை பொழிந்தது போல், உலகில் மழை பொழிந்து நாடு குளிர்ச்சி பெற வேண்டும். மக்களெல்லாம் நலமோடு வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு பாவை நோன்பிருக்க வாருங்கள் தோழியரே ! என்று ஆண்டாள் தன் தோழியரை அழைக்கின்றாள்.
பூமியில் இருந்து பெறப்படும் நீர் மீண்டும் பூமிக்கு மழையாய் வந்து பொழிவது போல் பிறருக்குக் கொடுக்கும் தான தர்ம புண்ணியங்கள் மீண்டும் நம்மையே வந்து சார்ந்து ...
மகிழ்ச்சி எனும் மழை பொழிந்து நன்மை தரும். குளிர்ச்சிதரும் வாழ்வு சிறக்க வழிவகுக்கும் . அப்படி சிறப்பான வாழ்வு பெறுவதற்கு பாவை நோன்பு இருக்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றாள் கோதை அவள்.
மேகம் கருப்பது போல் மன நிம்மதி இழந்து , துன்பமும் துயரமும் என இடி மின்னல் போல் சூழ்ந்தாலும், பத்மநாபன் இடைவிடாது கருணை மழை பொழிவது போல்..
இந்த பாவை நோன்பிருந்து மார்கழி மாத குளிர்தனில் தினமும் அதிகாலை நீராடி பரமனை நினைத்து திருப்பாவை பாடி வரும் அனைவருக்கும் இன்பம் எனும் வாழ்வு மலர்ந்து வாழ்க்கை வளமாகும் என்பதால் வாருங்கள் தோழியரே என நீராட வருமாறு ஆண்டாள் அழைப்பு விடுக்கின்றாள்.
நேற்று பாவை நோன்பிருக்க தவறிவிட்டோம் ! இன்று விட்டோம் இனி விரதம் தொடர சரி வருமோ என ஐயுறும் பெண்டிரே !அனைவருக்கும் அடியேன் கூறும் கருத்து இதுவே..
நாட்கள் சென்றாலும் விரதத்திற்கு நான்கு நாட்களே இருந்தாலும் ..பரமனை வழிபட்டு நினைக்கும் காரியம் கைகூட வேண்டும் எனும் வைராக்கியம் மனதில் வைத்து ... இனிவரும் நாட்களில் விரதம் இருப்பின் , பாவை நோன்பு இருந்த முழு பலனும் கிட்டும் .பெருமாளின் ஆசிதனை நாம் பெறலாம் என்பதை அறிவீர்.
தினமும் அதிகாலைமார்கழி மாதம் எழுந்து நீராடி திருப்பாவை பாடி பயன் பெறுவீர் .
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹