புரட்டாசி மாதம் சிறப்புக்குரிய மகாளய அமாவாசை அடுத்து பிரதமை தொடங்கி ஒன்பது நாள் அம்பிகையை நினைத்து வழிபட கூடிய ஒரு விசேஷமான தினம் தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாளும் அம்மனை மூன்று ரூபங்களாக பார்க்கிறோம்.
முதல் 3 நாள் துர்க்கையாக அதற்கு அடுத்த 3 நாள் மகாலட்சுமி ஆக அடுத்த 3 நாள் சரஸ்வதி ஆக மூன்று ரூபங்களில் அம்பாள் காட்சி தருகின்றாள்.மூன்று ரூபங்களில் காட்சி தரும் அவளே 9 ரூபங்களாகவும் இந்த நவராத்திரியில் பார்க்கலாம்.
மகேஸ்வரி- கௌமாரி -வராகி மகாலட்சுமி- வைஷ்ணவி இந்திராணி -சரஸ்வதி -நரசிம்ஹி சாமுண்டி என ஒன்பது ரூபங்களில் காட்சி தரும் அதே அம்பிகையே நூற்றியெட்டு திருநாமங்களாலும் நாம் இந்த நவராத்திரி பூஜையில் போற்றுகின்றோம் .
இப்படி பல ரூபங்களில் காட்சி தந்தாலும் சக்தி என்பவள் ஒன்றுதான் .அனைத்திற்கும் ஆதாரமான சக்தி என்பதும் ஒன்றுதான் .
இந்த பூமி கடல் காற்று அனைத்தும் தமக்குள் அடக்கமாக தாமே ஆதி பராசக்தியாக அன்னையின் அம்சமாக தாய்மையில் சிகரமாக இந்த பிரபஞ்சத்தையே ஆளக்கூடியவள்தான் அன்னையாய் திகழும் அம்பிகையே.
அம்பிகை பல ரூபங்களில் காட்சி தந்து- பல சுவாரசியமான விஷயங்கள் பெரியவர்கள் நிறைய சொல்லி இருந்தாலும் -ஒரே சக்தி ரூபம் கொண்டவள்தான் அம்பிகை. நம்முடைய உடம்பில் உறுப்புகள் பல இருந்தாலும் உடல் என்பது ஒன்றுதான் -மனம் என்பது ஒன்றுதான். இந்த மனமானது சக்தி சொரூபமான காட்சிதரும் அம்பிகையை சரணாகதி அடைந்து அவளுடைய அருளை முழுமையாக பெற வேண்டும் என்பதுதான் நவராத்திரியின் சிறப்பு.
அம்பிகையை சரணாகதி அடைந்து அவளுடைய அருளை பெறுவதற்கு நமக்கு பல நல்ல விஷயங்களையும் நல்வழி பாதையையும் அமைத்துக் கொடுப்பதுதான் இந்தநவராத்திரி வழிபாடு .
உடல் சோர்வை நீக்கி -அக இருளை நீக்கி உற்சாகம் கொண்டு தேவியின் திருநாமம் பாடி ஆனந்தத்தோடு நவராத்திரி விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் சிறப்புகள்..
வாழ்க்கையே மலர செய்திடுவாள்.
துன்பங்கள் அனைத்தும் நீக்கிடுவாள். மங்கலங்கள் பல அளித்திடுவாய் செல்வங்கள் சேர்த்திட கை கொடுப்பாள். அமைதி காத்து அருள்புரிவாள் அம்பிகையே.
இந்த நவராத்திரி எனும் இந்த ஒன்பது நாட்களிலும் விரதம் இருந்து நல்ல முறையில் வழிபட்டு- பல நல்ல விஷயங்கள் அறிந்து அவளுடைய அருளை பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.