ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
ஞாபக மறதி ஏன் வருகின்றது. ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
அறிவு சார்ந்த சிந்தனை
ஞாபக சக்தி என்பது அறிவு சார்ந்த சிந்தனையாகும்.
தொண்ணூத்தி எட்டுவயதிலும் கண்ணை கூர்ந்து பார்த்து அட! நம்ம பேர பயபுள்ள வடிவேலு வந்திருக்கான் பாரு என்று பெரியவர் கிழவியிடம் சொல்ல.
வாடா எப்படி இருக்கே.. நம்ம வீட்டுல எல்லாரும் சௌக்கியமா! முனியாண்டி பொண்டாட்டி ராக்குக்கு குழந்தை பெற போகுதுன்னு கேள்விப்பட்டேன் . குழந்தை பொறந்துடுச்சா, ராக்கு தங்கச்சி கண்ணம்மா வாழாமல் வீட்டில் வந்து இருந்தாளே.. அவ புருஷன் வீட்டுக்கு போனாளா இல்லையா.. பக்கத்து வீட்டு மாடப்பன் மாடு கண்ணு போட்டுடுச்சா! அவன் பையன் கன்னியப்பன் வெளிநாட்டுக்கு போய் பணம் சம்பாதித்துக் கொண்டு வரப் போறேன்னு சொல்லிட்டு இருந்தான் போய்ட்டானா என்ன .. 95 வயசு பாட்டி அடுக்கிக்கொண்டே போக வடிவேலு தலை முடியை பிய்த்துக்கொண்டான்.
அந்தக் கால பெரியவர்கள் ஞாபகசக்தியில் இன்றும் நம்மை அசத்துவது ஆச்சரியத்திற்குரியதே!
ஆனால் இன்றைய நிலைமை என்ன!
ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு ஆட்டைக் காணோம் என்று தேடுவோர் நிலைமை இன்றைய நிலைமை.
விருந்தினர்கள் வீடு தேடி வந்து விட்டால் அடுத்த அரை மணி நேரத்தில் ஆறு வகை பலகாரங்கள் அடுத்தடுத்து செய்து அசத்த தெரிந்த அத்தை , இன்று அடுப்படியில் என்ன செய்வது என்று புரியாது ஒரு நிமிடம் அப்படியே நிற்கின்றார். (வயதின் காரணமாக வரக்கூடிய மறதி)
"அம்மா என்னுடைய ஷூ எங்கே வச்சீங்க..என ஒரு பக்கம் மகள் குரல் கொடுக்க "பானு வந்து என்னோடு ராசியான ப்ளூ கலர் பேனாவை எடுத்து குடுத்துட்டு போ.. இன்னைக்கு முக்கிய மீட்டிங் அந்தப் பேனா என் கிட்ட இருந்தா என்னோட வேலை சக்ஸஸ் ஆகும்" என கணவனோ மறுபக்கம் குரல் கொடுக்க...
அடுப்படியில் அவசர வேலையில் புளி டப்பாவை எங்க வச்சேன் ! என தேடிக்கொண்டிருந்தவள் எரிச்சலுடன் எங்கிருந்துதான் இந்த மறதி வந்துச்சோ! என கவலையுடன் நேற்று நடந்த விஷயத்தை என் தங்கை அங்கலாய்க்க..(டென்ஷனால் ஏற்பட்ட மறதி)
வெங்காயம் தக்காளி மசாலா வதக்கும் மணமோ கமகமக்க, பன்னீர் சுவை சேர்ப்பதற்காக குளிர்சாதன பெட்டி அருகே வந்து என்ன எடுக்க வந்தோம்! என தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டு ஒரு கணம் அப்படியே புரியாமல் நின்று விட்டேன். இப்படியா மறதி வரணும் என கண்கலங்கும் என் தோழி ( சத்துக் குறைவால் ஏற்பட்ட மறதி)
அப்பப்பா! எல்லோருக்கும் இந்த நிலைமைதானோ இன்றைய நிலைமை .
நல்ல உடற்பயிற்சி
நல்ல உணவு முறை
மன அழுத்தம் இன்மை
நல்ல தூக்கம்
வயது வித்தியாசம் பாராது குழந்தைகளையும் ஒட்டிக்கொண்டது எப்படி என படிப்பில் குழந்தைகளின் மறதியை வைத்து காணமுடிகின்றது . இதற்கு பெற்றோர்கள் நல்ல தீர்வு கிடைக்குமா! என கூகுளில் இன்றுவரை தேடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்
அனைவரின் கவலையும் தீர்க்க கண்டுபிடித்தே ஆகவேண்டும் என களம் இறங்கி விட்டேன். அரிதான தொகுப்புகளை பகிர்கின்றேன் இக்கணமே..
ஆலிவ் ஆயில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
மீன் , முட்டை ஞாபகசக்தி அதிகம் கிடைக்கும்.
ஆரஞ்சு பழ ஜூஸ் மூளை நரம்புகள் புத்துணர்ச்சியோடு இருப்பதற்கு வழி வகுக்கும்.
வல்லாரைக்கீரை பருப்புடன் நெய் சேர்த்து கடைந்து சாப்பிடுவது மறதிக்கு விடைகொடுக்கும்.
தினமும் 5 வால்நட்ஸ், காய்ந்த பூசணி விதை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) எடுத்துக்கொண்டால் மூளை வளர்ச்சிக்கு உதவும். முக்கியமாக குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வரவும்.
மஞ்சள் தூள் சேர்த்த பால் தினமும் உட்கொள்ளவும்.
தவறாது முடிந்தவரை தினமும் இவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஞாபக சக்தி அதிகம் கிடைத்து மேற்கூறிய அனைத்தையும் சரி செய்யலாம்.
கீழ்க்கண்ட பயிற்சி ஒரு சின்ன பயிற்சி என்றாலும் மிக அருமையான பயிற்சி என்பதை ஒரு வாரத்தில் உணர்வீர்கள்.
10 பொருட்கள் எடுத்துக்கொள்ளுங்கள். பலூன் சீப்பு சாக்லேட் மளிகைப் பொருட்கள் என சின்னச் சின்ன பத்து பொருட்களை தேர்ந்தெடுங்கள். அனைத்தையும் ஒன்றாக வைத்து ஒரு நிமிடம் கூர்ந்து ஒவ்வொரு பொருளாக பார்க்கவும் . அடுத்து கண்களை மூடிக்கொள்ளுங்கள் . என்ன பொருட்கள் பார்த்தீர்கள் என்று சொல்லிப் பாருங்கள் அல்லது எழுதிப் பாருங்கள். ஐந்து அல்லது ஆறு பொருள் மட்டும்தான் முதல் நாளில் சொல்வீர்கள் . அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என தொடர்ந்து இந்த பயிற்சி செய்து பாருங்கள். நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
தினமும் தான் செய்யப் போகும் வேலைகளை அட்டவணை படுத்திக்கொள்ளுங்கள். மறதி எனும் டென்ஷன் இல்லாது காரியத்தை கச்சிதமாக முடிப்பீர்கள்.
செஸ் விளையாட்டு, புதிர் போட்டிகள் என குழந்தைகளுக்கான பயிற்சிகள் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
அனைத்து நோய்க்கும் ஒரே தீர்வு தூக்கம் என்பதை உணர்ந்து நேரத்தோடு தூங்கி நேரத்தோடு எழுந்து மறதிக்கு விடை கொடுங்கள்.
விழிப்புணர்வுக்கு ஒருநிமிடம்..
' பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா' எனும் பாடலை இந்த பதிவிலும் கொஞ்சம் கடன் கேட்போம். இந்தப் பாடலில் வரும் ' இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே' எனும் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை . ஒரு பொருள் எடுத்த இடத்தில் வைத்தால் எல்லா விஷயமும் சௌக்கியமே (நலமே)
எந்த டென்ஷனும் இலாது, மறதி எனும் வார்த்தை தனை மறந்து, தேடினேன் எனும் தெளிவு இல்லாத நிலை மறந்து , நேரத்தை மிச்சப்படுத்தி நிதர்சனமான வாழ்வுதனை பெற்று, தைரியமான தெளிவான சிந்தனை பெற்று நிம்மதியை காண்போம். நிம்மதியில் பெரும் மகிழ்வு காண்போம்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹