2021 வருடம் நான் இனிப்பு தனை செய்த நிகழ்வுதனை தங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி. வண்ணவண்ண பட்டாசுகள் பல ரகமாய் - வண்ண புத்தாடைகள் விதவிதமாய் இனிப்பு காரங்கள் புதுவிதமாய் வீட்டினில் நிறைவு பெற்று அனைத்து கவலைகளும் மறந்து கொண்டாடும் ஒரு பண்டிகை தீபாவளி.
கடைகளில் தீபாவளி இனிப்புகள் வாங்கினாலும் வீட்டில் ஏதாவது ஒரு இனிப்பும் காரமும் செய்வது வழிமுறையை கொண்டிருக்கின்றேன்.
அக்கால பலகாரம் முதல் இக்காலம் பணியாரம் வரை அனைத்தும் தெரிந்தாலும் நாம் அதில் என்ன புதுமை புகுத்தலாம் என்ற ஆர்வத்தில் சிந்திக்க எழுந்தது இனிப்பு ஒன்று !அதுவே நலபாகு லட்டு.
அது சரி ! நலபாகு லட்டில் அப்படி என்ன புதுமை இருக்கின்றது!
பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும் கலர் வண்ணம் , தித்திக்கும் திகட்டாத சுவைவண்ணம், வீடு முழுக்க நெய் மணத்தின் நறுமணம் , என முந்திரி பாதாம் பிஸ்தா என சேர்த்து செய்யப்பட்ட அருமையான சுவைமிக்கது தீபாவளி ஸ்பெஷலாக செய்யக்கூடிய நலபாக லட்டு.
பச்சைப் பயறு, கடலை மாவு , ரவை என ஆரோக்கிய பொருட்கள் சேர்த்து செய்த சுவையின் அருமை மிகவும் வித்தியாசமானது .
என்னுடைய முயற்சியில் எழுந்த லட்டு அருமையாகவே தீபாவளிக்கு இனிப்பாய் அமைந்தது.
நலபாகு லட்டு செய்முறை
சர்க்கரை 1கப்
கடலை மாவு ஒரு கப்
ரவை ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைப்பயிறு ஒரு டேபிள்ஸ்பூன்
கான்பிளவர் மாவு ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் சர்க்கரையோடு சேர்த்து பொடி செய்தது( சலித்துக் கொள்ளவும்)
முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன் உடைத்துக் கொள்ளவும்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
பச்சைப் பருப்பு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (குக்கரில்)
கடலை மாவை சலித்து ,ஒரு கப் கடலை மாவு, அரை கப் தண்ணீர் , சிறிது கேசரி பவுடர்,சிறிது உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் . (தேவை என்றால் சிறிது சோடா உப்பு சேர்த்துக் கொள்ளலாம்)
கடாயில் எண்ணெய் ஊற்றி பூந்தி கரண்டி அதாவது ஜல்லிகரண்டியில் கடலை மாவை ஊற்றி எண்ணெயில் பூந்தி போல் பொறித்துக் கொள்ளவும்.(பூந்தி போன்று ஹார்டு(Hard) ஆக இல்லாமல் சாப்டான (soft) ஆன பதத்தில் முன்பே எடுத்து விடவும்)
அடுத்து வாணலில் ஒரு டேபிள்ஸ்பூன் ரவை வறுத்து எடுக்கவும்.
முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும் .
பாதி வேலை முடிந்தது இனி சர்க்கரைப்பாகு தயார் செய்ய வேண்டும். சர்க்கரை ஒரு கப் எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது கேசரி பவுடர் சேர்த்து கொதி வந்ததும் பூந்தி , பச்சைப்பயிறு, ரவா மூன்றையும் சேர்த்து நன்றாக வேகவைத்து சுண்டியதும் (கடலைமாவு பூந்தி , பச்சைப்பயிறு , ரவா மூன்றும் சேர்ந்து mingle ஆகும்போது ஏற்படும் சுவையே தனி.. . )
ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சுண்டியதும் எடுத்து ஆறவைத்து முந்திரிப்பருப்பு (பாதாம் பிஸ்தா நமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி சேர்க்கலாம் )சேர்த்து உருண்டை பிடித்தால் அருமையான சுவையான நலபாக லட்டு தயார்.
உடலுக்கு ஆரோக்கியமான அருமையான சுவை கொண்ட இந்த நளபாகு லட்டு செய்வதற்கு மிக எளிதாக இருக்கும் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து சாப்பிடக்கூடிய இனிப்பு நளபாகு லட்டு என்பதால் இன்றே செய்து பாருங்கள்.