திங்கள், 16 ஆகஸ்ட், 2021

குடும்பம் எனும் நந்தவனத்தில் part-4

 

குடும்பம் எனும் நந்தவனத்தில் part-4

எதிர்காலத்தை முன்பே யோசித்து செயல்படுத்துக



திருக்கடையூரே  திருவிழா கோலத்தில் காட்சி அளிக்கின்றது. நூற்றுக்கணக்கான கார்கள் வந்து கொண்டிருக்க.. ஊரே களைகட்டி இருந்தது.


  திருச்சியிலிருந்து வந்திருந்த தம்பதியருக்கு சதாபிஷேகம்.  80 வயது பூர்த்தியாகும் போது நடத்தப்படும் மிகப் பெரிய விசேஷம். மிகப்பெரிய பிராப்தம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் .


 இந்த தம்பதியருக்கு கிடைத்திருக்கின்றது முகத்தில் ஆனந்தம் தொனிக்க மாலையும் கழுத்துமாக காட்சி தருகின்றனர். அமிர்தகடேஸ்வரர் ஆலயம் சொந்தபந்தங்களால்  நிரம்பி வழிந்தது.


 இரண்டு பெண்கள்.. மூன்று பிள்ளைகள் ...அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் என பெரிய குடும்பம். சொத்துக்களும் ஏராளம் . பிள்ளைகள் அனைவரும் பெற்றோரை ஆனந்தத்தோடு கொண்டாட கோலாகலமாய் இனிதே விசேஷம் முடிந்தது .


இரண்டு வருடத்திற்கு முன் திருக்கடையூரில் விசேஷம் நடந்தது. இன்றோ.. அந்த முதியவர் படுத்த படுக்கையில். ஒருகாலத்தில் உழைத்து உழைத்து சம்பாதித்து பிள்ளைகளுக்காக நிறைய சொத்துக்கள் சம்பாதித்துக் கொடுத்தார். சொத்துக்களின் மதிப்பு ஏராளம் .

பெரியவரின் நிலைமை

 வயது முதிர்ச்சி காரணமாக படுக்கையில் இன்று  சாய்ந்து கிடக்கின்றார். தந்தை முன் நின்று பேசக்கூட தெரியாத மகன்களும் ,மகளும் இன்று சொத்து பிரித்துக் கொள்ளும் வேகத்தில்.. 


 தந்தையின் உடல்நிலையை கூட மறந்து, தீவிரம் காட்ட ...குடும்பத்தில் நடக்கும் சூழ்நிலையைப் பார்த்து கவலைப்படுகிறார் முதியவரின் மனைவி.


 நிம்மதியாக உயிர் பிரிகின்ற நிலையில் இறைவனிடம் மனம் ஒன்றி இருக்க வேண்டியவர் .. பிள்ளைகளின் வாக்குவாதங்களை கண்டும்  இயலாமையில் தவிக்கிறார். பல குடும்பங்களில் இந்த பிரச்சனை நடக்கின்றது.


 அழகான பாரம்பரிய குடும்பங்களில் கூட இந்தப் பிரச்சனை மட்டுமன்றி சராசரி நடுத்தர குடும்பத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை காண்கின்றோம்.


 இந்த சொத்துக்களால்  சொந்தம் பாசம் பந்தம் அனைத்தும் காணாமல் போய்விடுகின்றது . பல குடும்பங்களின் நிம்மதி தொலைகிறது.


 இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கும் பொழுது முதியவரின் கவனக் குறைவாக இருக்கலாம்.சில குடும்பங்களில்  கோர்ட் வாசல் படியில் நிற்பதையும் பார்க்கிறோம்.


 உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை நம் பிள்ளைகள் நம் கட்டுப்பாட்டில் . அப்படி இருக்கும் போதே சொத்துக்களை இவ்வாறு பிரித்து இருக்கின்றேன் என்று சொல்லி முறையாக எழுதி வைத்திருந்தால்  இந்த பிரச்சனை வந்திருக்காது.


 என்னுடைய காலத்திற்குப் பிறகு என் மனைவிக்கும் , பிறகு இந்த சொத்துக்கள் பிள்ளைகளுக்கு என...  சொத்துக்களை பிரித்து பிள்ளைகளுக்கு  அடைய வேண்டும். என்று உயில் எழுதி இருக்க வேண்டும்.


பிள்ளைகளிடம் கண்டிப்போடு சொத்துக்களின் பிரித்த விவரங்களை சொல்லி இருந்தால்.. அதிக எதிர்பார்ப்பு சொத்தின் மீது இல்லாது பாசத்துடன் ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.


  40 வயதிற்குள் இருக்கும் வரை பிள்ளைகள்,  தம்முடைய பெற்றோர் அண்ணன் தம்பி தங்கை மேல்  பாசம் அதிகமாக இருப்பது இயல்பு .

தன்னுடைய அண்ணனின் வரவுக்காக சாப்பிடாமல் காத்திருப்பது படிக்கவில்லை என்று திட்டும் தங்கைக்காக,  அப்பாவிடம் தங்கைக்காக பரிந்து பேசி திட்டு வாங்கிக் கொள்வது

வளர்ந்த பிள்ளை என்றாலும் தாயின் மடி மீது தலை வைத்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பது, தந்தையின் மீதுஅன்பும் மரியாதையும் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பது என இருக்கும் பிள்ளைகள் கூட..,

40 வயதிற்கு மேற்பட்ட  பிறகு  தன் மனைவி ,தங்கள் பிள்ளைகள் ,தங்கள் குடும்பம் என பாகுபாடு அவர்களுக்குள் ஏற்படுவதும்  இயல்பு .


அந்த நேரத்தில் சொத்துக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கக் கூடிய  சூழ்நிலை  பிள்ளைகளுக்கு உருவாகும். 


 பெரியவர் ஆரோக்கியமாக இருக்கும்போதே சொத்து எழுதி வைக்கும் விவரத்தை சொல்ல தவறியதால் ..இன்று பிள்ளைகள் நிம்மதி இல்லாது ....


 பெரியவருக்கும் தன்னுடைய பேச்சை எடுத்துச் சொல்லும் இயலாமையால் நிம்மதி இல்லாது தவிக்கின்ற குடும்பமாய் இருக்கின்றது.


 எதிர்காலத்தைப் பற்றிய யோசனை மனிதனாய் பிறந்த நம் அனைவருக்கும் இருக்கவேண்டும் . அறுபது வயதிற்கு பிறகு ஒவ்வொருவருக்கும் ஓய்வெடுக்கும் தருணம் .நிம்மதியோடு படுக்கையில் சாய்கின்ற  தருணம்.


 அந்த நேரத்தில் நிம்மதியாய் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நேரத்தை நாம் தான் கணக்கிட வேண்டும் . அதற்கான முயற்சிகளை சரியாகவும் செய்யவேண்டும்.


 மற்றவரை எதிர்பார்க்காது வாழ்வதற்கான சூழலை பற்றி முன்பே யோசித்து... அதேநேரத்தில் வருங்காலத்தில் பிள்ளைகள் நலமாய் ஒற்றுமையாய் இருப்பதற்கான வழிகளையும் யோசித்து செயல்படுத்துக.


என்னுடைய வாழ்க்கையில்  நான் கண்ட அனுபவங்களை ஐந்து பதிவுகளாக பதிவிட்டு உள்ளேன். தங்களுக்கு இந்த பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .சராசரி வாழ்க்கையை அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான பதிவுகள் என்பதால் நீங்களும் படித்து மற்றவருக்கும் பகிருங்கள்

குடும்பம் எனும் நந்தவனத்தில்...

part-3 எதிர்காலத்தை முன்பே யோசித்து செயல்படுங்கள்🌹🍀🌹👇👇👇👇

https://balakshitha.blogspot.com/2021/08/part-3.html


Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக