திங்கள், 20 டிசம்பர், 2021

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 6

 

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் - 6


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ!  பிள்ளாய் எழுந்திராய் ! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

பாடலின் விளக்கம்.‌.

மார்கழி மாத விடிகாலைப் பொழுதில் பெருமாளை நினைத்து பாவை நோன்பிருந்து தோழியரை நீராட வருமாறு திருப்பாவை பாடி அழைக்கின்றாள் கோதை.

பசுமையான  பனித்துளிகள் துளிர்த்தெழுந்து   அழகான அதிகாலை பொழுதினிலே  ...


பறவைகள் கீச்சென்று குரல் கொடுக்கும்  கானமொழி தங்களுக்கு கேட்கவில்லையோ!

காரிய சித்தி உண்டாக,  கைத்தொழ உடன் பலன் கொடுக்கும் கருட பகவானை வாகனமாக கொண்ட பெருமாள் கோவில்களில் ....


வெண் சங்கு முழக்கம் முழங்குவது நின் காதில் கேட்கவில்லையோ!

தன்னுயிரை மாய்க்க வந்த அரக்கி பூதகியை , பால் குடிப்பது போல் நடித்து அவள் உயிரை மாய்த்த கண்ணனை கார்மேக வண்ணனை ...


யோகிகள் முனிவர்கள் ஹரி ஹரி என பக்தியோடு அழைக்கும் குரலும்  கேட்கவில்லையோ!

வாருங்கள் தோழியரே நீராட போவோம் என்று பாவை நோன்பு இருப்பதற்காக தோழியரை அழைக்கின்றாள் கோதை..

அழகான காலைப்பொழுதில் நீராடி,  பெருமாள் கோவிலில்  எழுப்பக்கூடிய வெண் சங்கின் நாத கானம் கேட்டு,  பூதகியை அழித்த  கண்ணனை நினைத்து நீராடி ....


பாவை நோன்பு மேற்கொண்டு,   ஹரி நாமத்தை சொல்லி பாவை நோன்பு விரதமிருந்து  தினமும் திருப்பாவை பாடி வழிபட்டால் நினைத்த மணவாளன் கரம் பிடிப்பான் ,நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பான் எம்பெருமான் என்பதே மார்கழியின் தத்துவம்.

அழகு ,அறிவு ,இளமை ,செல்வம் வெற்றி ,புகழ் ,வலிமை அனைத்தும் பெற்று நம்  வாழ்க்கை என்றும் இனிப்பாக அமைந்திட.. சர்க்கரை வெல்லம் குங்குமப்பூ‌ ஏலக்காய்  மணக்க முந்திரி திராட்சை கற்கண்டு சிவக்க நெய் சேர்த்து விசேஷமாய்  செய்யப்படும் பொங்கல் தனை மார்கழி மாத பிரசாதமாய் வைத்து வழிபட்டு பெருமாளை வரவேற்பது மார்கழியின் சிறப்பு.

'ஹரி ஓம் நமஹ' எனும் மந்திரம்  மார்கழி மாதம் முழுதும்  பாராயணம் செய்தால் வைகுந்த பதவி நிச்சயம் என்பதே மார்கழி மாத வேதாந்தம்.

'இப்பிறவியில் நாம் செய்யும் செயல்களின் புண்ணிய பலன்களே  ..எப்பிறவியிலும் நம்மை காத்து அருளும்' எனும்  உறுதி நாம்   கொண்டு தெய்வீக மாதத்தற்கு  மேலும் சிறப்பு சேர்த்து வாழ்வினில்  இனிது  காண்போம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக