செவ்வாய், 21 டிசம்பர், 2021

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் - 7

 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் -  7


கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ! பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச  நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ ! நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ !தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.


பொருள் விளக்கம் 


ஆனைச்சாத்தன் எனும் வலியன் குருவிகளின்  கீச் கீச் என்ற அழகிய குரல்தனை தோழியரே தங்களுக்கு கேட்கவில்லையா! அவை தம் இனிய துணையோடு பேசும் சத்தமும் கேட்காது ஏன் இந்த தூக்கம் ! எழுந்து வாரீர் தோழியரே!  என்று தம்முடைய தோழிகளை பாவை நோன்புக்கு அதிகாலை நீராட  அழைக்கின்றாள் கோதை.


அறிவில்லாதவளே ! என  செல்லமாக கடிந்து கெண்டு மேலும் தொடர்கின்றாள்...


  வாசனை மிக்க கூந்தலைக் கொண்ட ஆயர்குடி பெண்கள் மத்தால் தயிர் கடைந்து  எழுப்பும் ஓசை தனை கேட்கவில்லையா ! அவர்கள் தம் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும்,  ஆமைத்தாலியும் 

அசைந்தாடும் அழகான  ஒலி சத்தமும் தங்கள் காதில் விழவில்லையா!


'எல்லோருக்கும்  தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற ' என்று தோழியரை  அதை அழைக்கின்றாள் கோதை.


இந்த பாசுரத்தில் நாராயணனான  கேசவன் என்று கோதை குறிப்பிடும் அந்த சொல்லுக்கு மிக அழகான ஆத்மார்த்தமான புகழ் உண்டு ..



 யாருக்கும் சொல்லாத ரகசியத்தை நாராயணனே நேரில் வந்து ராமானுஜரின் காதில் ஓதி  'நீ மட்டும் விண்ணுலகம் சென்று  மோட்சம் பெருக' என்று கூற ராமானுஜரோ ...


நான் விண்ணுலகம் சென்று  மோட்சம் பெறாவிடினும்,  உலக மக்கள் அனைவரும் இந்த மந்திரத்தை பெற்று உலக நன்மை அடைய வேண்டும் என்று சொல்லி கோவில் கோபுரம் உச்சிதனில்  அனைவரையும் அழைத்து அழகாய் சொன்ன மந்திரம் இது 

'ஓம் நமோ நாராயணாய நமஹ'


மார்கழி மாதத்தில் தினமும் இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் படிப்பார் வாழ்வினில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவர் என்பதனையே


நாராயணனாகிய கேசவன் என்று சொல்லி தோழியரை  அழைப்பு விடுக்கின்றாள் கோதை. 


இந்த அற்புத மந்திரம் நாம் அறிந்து நம்  உதடுகளோ  'ஓம் நமோ நாராயணாய நமஹ '  என  வேதம் ஓத ,  மனமோ ஆனந்த கீர்த்தனையில் அளவளாவ, ஆனந்தப் பெருக்கில் நம்மையே அறியாமல் கண்களில் கண்ணீர் உருண்டோட இதுவே ஆனந்தம் . இதுவே ஆன்மீகம். இதுவே ஆத்மார்த்தம். இதுவே பிறவிப்பயன்.  இதுவே மோட்சத்திற்கான வழி.


மார்கழி பொழுது பெருமாளின் ஆலயம் செல்க. வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் நாராயணனை ஆண்டாள் நாச்சியாரோடு  சேவித்து 'உம்முடைய பாதங்களே சரணம் "என சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பெருமாள் தரிசனம் கிடைத்ததை நினைத்து மனமோ பக்தியால் நிறைந்திருக்க..


கண்களில் இருந்து கண்ணீர் மல்க இதுவல்லவோ ஆனந்தம் என்று  நின்று கொண்டிருக்கும் அந்த கணபொழுதுதான் இறைபக்தி என்பதாகும். 


அந்த இனிய தருணத்தை அனைவரும் பெற்று  தெய்வத்தின் அருளும் ஆசியும் பெற்று பிறந்த பயனின் நிறைவு காண்போம்


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக