50 வருடத்திற்கு முன் பின் நோக்கி பார்க்கின்றேன்..
சூரிய உதயம் எழும் முன்பே சேவலின் கூவல் , பசுஞ்சாணி மெழுகி , பச்சை பாய் விரித்தலில் பச்சரிசி மாவு கோலம் (எறும்புகள் உண்டால் நமக்கு புண்ணியம்) மெல்லிய பூங்காற்று பச்சை பசேலென்று புல்வெளிகள் , ஜதி தாளம் போடும் அருவியின் சத்தம் எங்கிருந்தோ வருகின்ற குருவியின் கீச்சென்ற ஒளி , வானத்தில் பறக்கின்ற காக்கையின் கூட்டம் , கோவிலில் அம்மன் பாட்டு இவை அனைத்தும் ரசிப்பதற்கு நான் இல்லை.. என் தாய் தன் கிராமத்து வாழ்க்கையில் சொல்லும்போது நகர வாழ்க்கை கசப்பது ஏன்! எனும் அர்த்தம் புரிகின்றது.
சுருக்கமாக பதில் எழுத நினைத்தாலும் தித்திக்கும் பாடல் ஒன்று நினைவுக்கு வர அடுத்து போக மனமில்லை என் செய்வேன்!
ஐம்பது வருடத்திற்கு முன்பாக அழகிய தாலாட்டு பாடலொன்று .. தேன்சுவை பாடலோடு நாம் கலப்போம்.
ஆராரோ ஆரிரரோ -கண்ணே
ஆராரோ ஆரிரரோ
உன்னை யார் அடிச்சு நீ அழுத
அடித்தாரை சொல்லி அழு.
மாமன் அடிச்சாரோ! மல்லிகைப்பூச் செண்டாலே ..அத்தை அடித்தாளோ! அரளிப்பூ தண்டாலே..
தாத்தா அடிச்சாரோ! தாமரை பூ தண்டாலே ...பாட்டி அடித்தாளோ! பாலூட்டும் கையாலே..
சித்தி அடித்தாளோ !சிறுகீரை தண்டாளே .. யாரடிச்சு நீ அழுத அடிச்சார சொல்லி அழு...
நான் அவருக்கு ஆக்கினைகள் செய்து வைப்பேன் தொட்டாரை சொல்லி அழு .. நான் அவருக்கு தோள் விலங்கு மாட்டிடுவேன்..
தங்க சங்கெடுத்தால் புத்தி குறையுமுன்னு ,வெள்ளி சங்கெடுத்தால் வித்தை குறையுமுன்னு நடுக்கடலில் மூழ்கி நாராயணன் சங்கெடுத்து தாய்மாமன் வாரண்டி...
இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் அந்த காலத்தில் நடைமுறையில் பயன்படுத்தப்படும் அழகிய சொற்றொடர்களே.
மேலும் சில நடைமுறை வார்த்தைகளும் உண்டு ..
ஒன்றும் அறியாத குழந்தைகளை 'பத்தாம்பசலி' என ,
குழந்தைகளை கேலி செய்து பேசும்போது 'வாயில் விரல வைத்தால் கடிக்கக் கூட தெரியாது' என..
துடுக்கான குழந்தைகளை 'ஊரையே விலைக்கு வாங்கி விடுவான்' என..
வேலை ஏதும் இல்லாதவனை 'வெட்டிப்பய புள்ள' என...
தேவையில்லாத வார்த்தைகள் பேசிக்கொண்டே இருப்பவனை 'கிறுக்கு பயபுள்ள' என..
நல்ல அறிவுள்ள குழந்தைகளை 'தீர்க்க அறிவு படைச்சவன்' எனவும் 'தில்லாலங்கடி ஆச்சு இவன் சமாளிச்சுடுவான் ' எனவும் பேசுவது அக்காலத்தில் நடைமுறையில் உள்ள சொற்கள்.
காலத்தின் கோலம் என்பது சிதையாது இருந்தால் அக்காலம் போல் இக்காலம் என்பது வரவேற்கத்தக்கதா ! என்பதை ஆய்வு செய்தால்...
காலம் மாற மாற குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாகி விஞ்ஞான வளர்ச்சி கூடுவது என்பது மிகவும் சிறப்புக்குரிய செய்தியே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக