புதன், 12 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாசுரம் பாடல்கள் 29 , 30

 ஆண்டாள் அருளிய திருப்பாவை

 பாடல் -  29



சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதுஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


பொருள் விளக்கம் ;

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பொற் பாதங்களை வணங்க காத்துக்கொண்டிருக்கும் எங்களின் காரணத்தைக் கேட்பாயாக ! 

ஆயர் குலத்தில் பிறந்த எங்கள் பரந்தாமா!  நோன்பு மேற்கொண்டு வந்திருக்கும் எங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் எங்களின் நிலை என்ன ! 


நீர் கொடுக்கும் பொருள் வேண்டேன் ஆனால் நாங்கள் பாவை நோன்பு மேற்கொண்டு வேண்டி நிற்பது ஏற்றுக் கொள்வாயாக . ஏழு பிறவியிலும் ஆயர் குலத்தில் எங்களோடு நீ பிறக்க வேண்டும் .  எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.  என்று மனமுருக கண்ணனை அழைக்கின்றாள் ஆண்டாள்.

 கண்ணனின் அருளைப் பெறுவது எப்படி! என  நமக்கு சற்று அழுத்தமாகவே இந்த பாசுரத்தில் எடுத்துரைக்கின்றாள் ஆண்டாள். அவனிடம் நம்முடைய வேண்டுதல் கேட்பதை முதலில் விடுத்து கண்ணனின் மனதில் இடம் பிடிப்பதற்கான பக்தி வழிபாடு கடைப்பிடிக்க அவனே வேண்டிய அனைத்தையும் நமக்கு நிறைவேற்றுவான் என்பதே  இந்தப் பாசுரத்தின் கருத்து.


திருப்பாவை பாடல் -  30



வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


பொருள் விளக்கம்;

அலைகள்நிறைந்த அமுதமெனும் பாற்கடலை கடைந்த மாதவனும்,  கேசி என்ற அரக்கனைக் கொன்று தீமை தனை அழித்த  கேசவனுமான கண்ணனை, தங்கம் எனும் அங்கம் கொண்ட சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட  மங்கையர் அணிகலனோ அழகு பெற ஆதவன் ஆன மாதவனை  சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்றனர்.


ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், தான் நோன்பின் பலன் பெற்ற அனைத்தும் இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.


 இதனை படிப்பவர்கள், உயர்ந்த  நிமிர்ந்த  திட தோள்களை யுடையவனும், அழகிய கனிந்த அருள்பெரும் கண்களைக் கொண்ட திருவதனம் உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் பெருமாளின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர் இத்துடன் திருப்பாவை பாசுரம் முடிவடைகின்றது.




தெய்வ பக்தி நிறைந்திட எம்பெருமானை என்றும் வழிபட்டு  தினமும் பத்து நிமிடம் ஸ்லோகம் படித்து, முடிந்த நேரங்களில் தெய்வீக வரலாறு கேட்டு , பக்தி பாசுரங்கள் பாடி விரத நாட்களில் வேண்டிய தெய்வத்தை அகத்தினில் இருத்தி வழிபட்டால்  , மகாலஷ்மி வாசம் செய்யும் இல்லம்தனை நாம் பெறுவோம்.


 அவளுக்குப் பிடித்தமான ஏலக்காய் மாலை தனை பெருமாளுக்கு நாம் சாற்றி  பக்தி மணம் நுகர்ந்து பெருமாளின் அருள் பெறுவோம்.


வெண்ணிற பாலின் மனம் கொண்டு, தேனின் சுவையென குணம் கொண்டு , முக்கனியில் தித்திக்கும் சிந்தை இனித்து ,  மாசில்லா நெஞ்சம் கொண்ட சுற்றம் அமைந்து,  பொற்குவியலாய்  குவிந்த  செல்வம் பெற்று,  தேவாமிர்தமான  வாழ்வுதனை நீர்  பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே ! வாழ்வின் பிறந்த பயனில் இனிது கண்டு நிறைவு காண்கவே.


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக