திங்கள், 17 ஜனவரி, 2022

மைக்ரேன் தலைவலிக்கு தீர்வு தான் என்ன!

 மைக்ரேன் தலைவலிக்கு தீர்வுதான் என்ன!

நம்முடைய வாழ்க்கை எனும் பயணத்தில் கட்டுப்பாட்டை  விடுத்து நம் உடலுக்கு சுதந்திரம் கொடுத்து , ஆங்காங்கே சற்றே நாம்  இளைப்பாற ... அச்சமயம் பூக்கின்ற நட்பு மலர்கள் தான் தலைவலி, பி பி  , சுகர் தைராய்டு போன்றவை.



என்னுடன் நட்பு கொள்ள விழைவது தலைவலி காரகன் மட்டுமே .  மாதம் இருமுறை  விருந்தினராக வீட்டிற்குள் நுழைந்து விடுவான்.

அப்படித்தான் நேற்றும் நடந்தது . நேற்று சற்றே  அலைச்சல்,  நல்ல வெயில் , பேங்க் வேலை.. அப்படியே அத்தை மகளுக்கு சீமந்தம்  அங்கு மேளதாள நாதம் விருந்தினர்கள் பேச்சு, ஹோட்டல் அருமையான சாப்பாடு அதை முடித்துவிட்டு  வீட்டிற்கு வர எனக்கு முன்னால் அங்கே உட்கார்ந்து இருப்பது யாரோ !  என் குரல் , பாட்டிற்கு இசைப்பாட்டு "மைக்ரேன் தலைவலி காரன் என பெயர் தெரியாதோ' என்று குரல் கொடுத்தது

வெயிலில் சென்றது,  ஓட்டல் சாப்பாடு, கூட்டநெரிசல் ,நேற்று கொஞ்சம் வீட்டில் பிரச்சினை அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் இப்படி  இத்தனை தவறு செய்தால்.. நான் தானே உன்னை கண்டிக்க முடியும். அதனால் தான் வந்துவிட்டேன் என்றான் தலைவலி காரகன் .(புதன் காரகன், வியாழன் காரகன் , சுக்ரன் காரகன்  என தினமும் நான் சுபக்கிரகங்களின் வேண்டி நான்  அழைக்க , இந்த தலைவலி காரகன் மட்டும் அழையா விருந்தாளியாக தானாகவே அடிக்கடி மாதத்தில் இருமுறையாவது எனைத்தேடி வந்து விடுகின்றான் ) என்ன செய்வது ! வந்த விருந்தாளியை முறையோடு உபசரித்து அனுப்பி வைப்பதில் தமிழ் பண்பாடன்றோ!  என உபசரிப்பில் குறை  வைக்காது முறையாக இன்று வரை செய்து வருகின்றேன் ' என்று  சிரிப்பவளின் முகத்தை  ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

'கேட்டால் .. மனக்கட்டுப்பாடு இலாது நீ செய்யும் தவறுக்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்று இலக்கணம் வேறு மிக அழகாக சொல்வான் ' என்று மிக அழகாக எந்தவித கவலையுமின்றி ஆயாசமாக சொல்கின்றாள்  என் நெடுநாளைய தோழி பத்மா.

எப்படி இவளால் ரசனையோடு பேச முடிகின்றது அவளைவிட மிக அதிகமாக நான்தான் கவலைப்படுவேன்.

வெளியே போகாது , அதிக  ஒலி (ளி) சத்தம் கேட்காது , ஓட்டல் சாப்பாடு இல்லாது , மன உளைச்சல் என்பதே வராது ஒரு மனிதன் வாழ்வது என்பது சாத்தியமா! மைக்ரேன் தலைவலி காரனுக்கு இது புரியாதா!

வயிற்றுப் புரட்டு,  வாமிட்டிங் சென்சேஷன் , கைகளால் தலையை பிடித்துக் கொண்டு தைலத்தை தேய்த்துக் கொண்டு ,சாப்பிட்டால் வாமிட்டிங் வருமோ என பயந்து சாப்பிடாது படுக்கையில் புரண்டு கொண்டு , சில சமயம் மாத்திரை போட்டாலும் வேலை செய்யாது .. அவ்வளவு துன்பங்கள் அனைத்தையும் அவள் அனுபவிக்கும் போது , சமையல் கஷாயம் போன்றவை என்னால் செய்துகொடுக்கும் முடியுமே தவிர வேறு ஒன்றும் முடியாது மிகவும் வருத்தப்படுவேன்.



'டாக்டரிடம் வா'‌ 

என்று சொன்னால்... சரியாகப் போய்விடும் என்று சொல்லி வரமாட்டாள் ஒரு நாள் இரண்டு நாள் தான் அதற்குப் பிறகு நார்மலாக மிகவும் உற்சாகமாக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவாள்.

தலைவலி காரகனை தகுந்த சன்மானம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டேன் என்று  அவள் சிரித்து நானும் சேர்ந்து சிரிப்பதுணடு  (மனதில் வருத்தத்துடன்)

மைக்ரேன் தலைவலி தீர்வுக்கு  முழு விளக்கத்தையும் தேடுவதற்கு ஐஸ்வர்யா ரவிசங்கர் அவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி . இந்த பதிவு மூலமாக என்னுடைய தோழிக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மைக்ரேன் தலைவலி என்பது நரம்பியல்  சம்பந்தப்பட்டது .  நமக்கு ஒவ்வாத செயல்களினால் நம்முடைய மூளை விரிவடையும் போது இப்படிப்பட்ட தலைவலி வருகின்றது ‌‌.

தலைவலி வருவதற்கான காரணம், தலைவலியால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் , தோழியின் அனுபவத்தை கொண்டு தெரிந்து இருப்பீர்கள்.

இனி தலைவலி வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். மைக்ரேன் தலைவலிக்கு  மருத்துவம் என்பது இரண்டு வகை உண்டு.

1- பிரெவென்ட்  மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ் (prevent  migrane treatment)

2 - அப்பார்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்( Apartive migrane treatment )

அடிக்கடி தலைவலி வந்தால் மருத்துவரிடம் செல்வது அவசியம் . மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மைக்ரேன்  தலைவலி என்றால் மருத்துவர்கள்  பரிந்துரை செய்வது இந்த பிரெவென்ட் ட்ரீட்மென்ட்.

1 - பிரெவென்ட் ட்ரீட்மென்ட்  என்பது தலைவலி வராது இருப்பதற்கு தடுப்பு சிகிச்சை . மிகவும் எளிதான எந்தவித சிரமமும் இன்றி எடுத்துகொள்ள கூடிய மருத்துவம்.

மூன்று அல்லது ஆறு மாதம் வரை தினம் எடுத்துக்கொள்ளவேண்டும் மாத்திரை என  மருந்துகள் எடுத்துக் கொள்வது அவசியம். 

2 -  அப்பார்ட்டிவ்  ட்ரீட்மென்ட் என்பது  தலைவலி வரும்போது விடுபடுவதற்கு தீர்வளிக்க கூடியது.  இதில் மிக முக்கியமாக தலைவலி வந்ததும் 30 அல்லது 45 நிமிடங்களுக்குள் இந்த மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம்முடைய மூளையில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து விட்டால் அதன் பிறகு என்ன மாத்திரை எடுத்துக் கொண்டாலும் அது பயன் தராது.  நாம் எப்போதும் எத்தனை மணிநேரம் வலியில் அவதிப்படுகிறோமோ  அதே நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

ஆதலால் இந்த ட்ரீட்மென்ட் , ‌தலைவலி வந்ததும் இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.  படிப்படியாக தலைவலியிலிருந்து முழுமையாக விடுபடலாம் .


மைக்ரேன் தலைவலி வரும்போது நாம் மிக முக்கியமாக நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்...

மாத்திரை எடுத்துக் கொண்ட ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கண்டிப்பாக அமைதியான இருட்டு அறையில் முழுமையான ஓய்வு தூக்கம் எடுத்துக்கொண்டால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.



ராஜம் சுக்கு மல்லி காபி கடைகளில் கிடைக்கும்.  (பால் சேர்க்காது) ஒரு தம்ளர் தண்ணீரில் ராஜம் சுக்கு மல்லி காபி தூள் மற்றும் பனை சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சூடாக அரை டம்ளர் அருந்தவும்.  தலைவலிக்கு மிகவும் நிவாரணம் அளிக்கக்கூடிய ஒரு இன்ஸ்டன்ட் காபி .

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சூடான தண்ணீர் அருந்துங்கள்.

முழுநேரமும் படுத்துக்கொண்டே இருந்தால் மேலும் தலைவலி அதிகம் இருக்கும்.  உங்களுக்கு பிடித்தமான வர்களுடன் பேசுவது ,  பிடித்த இசையை கேட்பது,  பிடித்த விஷயங்கள் செய்வது என சிந்தனையை மாற்றும் போது தலைவலி 'போயே போச்சு ' எனும் நிலை பெறலாம்.

நமக்கு எந்த விஷயம் ஒவ்வாமல் தலைவலி வருகின்றது என்று ஓரளவு நம்மால் கண்டுபிடிக்க முடியும் அதை ஓரளவு தவிர்த்துவிடுங்கள்.

குளிர்ச்சி தரக்கூடிய காய்கறிகள் தவிர்த்துவிடுங்கள். முள்ளங்கி பெங்களூர் கத்திரிக்காய் , பூசணி, தக்காளி போன்ற காய்கறிகள் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

தலைவலியை பற்றி அலட்சியமாக இருக்காதீர்கள் அது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். நாம் மருத்துவரிடம் சென்று ட்ரீட்மென்ட்  எடுத்துக் கொள்வது அவசியம்.

'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பதை விடுத்து ,களை எடுத்து  பயிர் செழிப்பாக வளர்வது போன்று ஆரம்பத்திலேயே நோய்களை நீக்கி செழிப்பாக உற்சாகமான ஆரோக்கியமான வாழ்க்கை  பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக