ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே!துயிலெழாய்!செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குள் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
பொருள் விளக்கம்
நமக்கு துயர் வந்தால் யாரை அழைப்போம்! பரமனை அழைப்போம். அதற்காகத்தான் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் வருவதற்கு முன்பாக ஓடிவந்து துயரம் தீர்க்கும் பெருமானே! நீ எழுந்திருப்பாயாக! என்று ஆண்டாள் தன் பாசுரத்தில் பாடுகின்றாள்.
கலியுக தெய்வமே! நேர்மை தவறாத எம்பெருமானே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு பயத்தை கொடுத்து வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூய மனம் உடையவனே! துயில் எழுவாயாக.
கண்ணனையும் நப்பின்னையையும் மாறிமாறி பாடி அழைக்கின்றாள் தன் திருப்பாசுரத்தில் ஆண்டாள். ஏன் அப்படி அழைக்கின்றாள்!
பாசுரம் படிப்போர் நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்ந்து கமழ்ந்து உருகி வேண்டும் என்றா! அல்ல..மாதவனை மட்டும் புகழ்ந்தால் நப்பின்னைக்கு கோபம் வந்தால் என்ன ஆவது ..காரியமே கெட்டுவிடும் என்று ஐயத்தின் காரணமா! அல்ல அல்ல...
அம்மையின் கடைக்கண் பார்வை பட்டால் தான் கண்ணன் அசைவான் துயில் எழுவான், தம் முகம் காண்பான் நோன்பு விரதம் வெற்றி பெறும் எனும் காரணமே உண்மை என்று கூறும் விதமாக திருப்பாவையில் மேலும் நப்பின்னையின் மேல் புகழ்மாலை தொடுக்கின்றாள் ஆண்டாள்.
பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தானங்களும், பவளச் செவ்வாய் மலர சிற்றிடையில் அழகூட்டும் எங்கள் நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக.
எங்களுக்கு விசிறியும், கண்ணாடியும் உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்து இந்த பாவை நோன்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பாயாக என்று நப்பின்னையை அழைக்கிறாள் ஆண்டாள்.
நப்பின்னையிடம் விசிறியும் கண்ணாடியும் ஏன் கேட்கிறாள் ஆண்டாள் !அதற்கும் பொருள் கண்டு ஆனந்தம் கொள்வோம்..
தனக்காக என இலாது மற்றவர்களுக்கு காற்று எனும் தென்றலை பகிர்ந்து மற்றவரின் மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக அமைவது விசிறி.
நாம் சுயநலமின்றி நம் சுற்றியிருக்கும் மற்றவரின் நலன் கருதி வாழ்தலே பிறந்த பயனின் சிறப்பு என்பதை எடுத்துக் கூறும் வகையில் விசிறியில் கேட்கின்றாள்.
நம்முடைய பிரதிபலிப்பை காட்டும் கண்ணாடி நம்மை மட்டுமல்ல... நம் மனதையும் சேர்த்து பிரதிபலிக்கும்.
கண்ணாடி பார்த்தல் எதற்காக! நம்முடைய அகத்தில் உள்ள குறைகளை நாம் அறிந்துகொண்டு அதை மாற்றி நற்குணங்கள் பெற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது கண்ணாடி.
அதனால்தான் நிலை வாசலில் கண்ணாடியை வைக்கின்றோம். மங்கல பொருட்களில் கண்ணாடி இருக்கவேண்டியது ஐதீகம் என்கின்றோம். நாம் மட்டும் அல்லாது கண்ணாடியை பார்க்கும் அனைவரும் தன்னுடைய பிரதிபலிப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது கண்ணாடி. அதனால்தான் ஆண்டாள் விசிறயுடன் சேர்த்து கண்ணாடியும் தருமாறு நப்பின்னையிடம் வேண்டுகின்றாள்.
அது சரி விசிறி கண்ணாடி கேட்கின்றான் கண்ணனையும் சேர்த்து அல்லவா கேட்கின்றான் இது நியாயமா என்ற ஐயம் எழுகின்றதா!
கண்ணனாக , வைகுண்ட வாசனாக சீனிவாசனாக , மாதவனாக கோவிந்தனாக ஆக பல காட்சிகள் தருபவன் எம்பெருமான் நாராயணன். கண்ணன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமல்ல நம் அனைவருக்கும் சொந்தமானவன் .
நம் குறையை தீர்த்து அருள்பவன் என்பதை உலகுக்கு அருள் வதற்காக ஆண்டாள்விசிரி, கண்ணாடியுடன் , கண்ணனையும் எங்களிடம் தருவாயாக என்று வேண்டுகின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக