புதன், 5 ஜனவரி, 2022

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல்- 21

 ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 21



ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள் விளக்கம்

ஆண்டாள் பாவை நோன்பிருந்து கண்ணனை அழைக்கின்றாள் .

இல்லை என்று சொல்லாது  கொடுக்கும் வள்ளலை போல  மடிதனில் பொங்கி நிரம்பி வழியும் அமுதமெனும் பால் சுரந்து நமக்கெல்லாம் வழங்கும்  பசுக்களின் தலைவனாய் விளங்கும் நந்தகோபாலனே! எழுந்திராய்!

கள்ளம் கபடம் இல்லாத பால்போன்ற வெண்மனதோடு இருந்தால் மட்டும் போதாது.‌. கொடுத்து உதவும் குணமும் இருந்தால் மட்டுமே ...

நமக்கு தலைவனான நாராயணனின் குழலில் இருந்து வரும் நாதம் எனும் அருளைப் பெற முடியும் என்று எவ்வளவு அழகாக தன்னுடைய திருப்பாவையில் தெளிவுபடுத்துகின்றாள்  ஆண்டாள்!

வேதங்கள் அனைத்தும் உமை  போற்றும்.  வலிமை உடையவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் ஒளிசுடரே! துயில் எழுவாயாக! என்று பாடி அழைக்கின்றாள் கோதை.



எதிர்ப்பவர்கள்  வலிமைதனை  தான் இழந்து அடுத்த கணம் வீழ்வார்கள் உன் காலடியில்...  நாங்களும் உன் மீது வைத்த அன்பினால்  நின்  திருப்புகழ் பாடி வெளியே காத்திருக்கின்றோம் அறியாயோ!  எம்பெருமானே  எழுந்திராய்! என்று கண்ணனை அழைக்கின்றாள்.

ஆஹா ! ஆண்டாள் தன்னுடைய திரு பாசுரத்தில் கண்ணனை எப்படியெல்லாம் புகழ்மாலை பாடி எழுப்புகின்றாள். அவளுடைய திருவாயில் மலரும் வாழ்த்து பாடல்கள் கண்ணனை எழுப்பச் செய்யுமா !

அன்று தாம் கட்டிய மாலைதனை தானே  சூடி கண்ணாடி முன்பு அழகு பார்த்து , அதே மாலைதனை  கண்ணனுக்கும்  சூடி அழகு பார்த்தவள் கோதை .

கட்டிய மாலையில் அன்பாய் அமர்ந்த அவளின் ஒரு திருமுடி தனில் அன்று  கண்ணனையே கட்டிப் போட்டவள் அன்றோ கோதை ! அப்பொழுது விழுந்தவன்தான் கண்ணன்  இன்னும் எழுந்திருக்க வில்லை என்பதை அறியாது  எழுப்புகின்றாள் கோதை.

பொங்கி வரும் பால் போன்று கள்ளம் கபடம் இல்லாத மனம் வேண்டும் கொடுத்து உதவும் குணம் வேண்டும் ஆணவம் விடுத்து அன்போடு கண்ணனை கட்டிப் போடுங்கள்.  கண்டிப்பாக வருவான் என்று இந்தப் பாடலில் பாசுரத்தில் ஆண்டாள் பாடுகின்றாள்.



இந்த பாசுரத்தில் இருந்து  ஒரு துளி சிந்தனை சிதறலாக .....

பத்து ரூபாய் வரவு தனில்  ஒரு ரூபாய் உளமறிந்து  உவகையோடு  இல்லை என வருந்தும் எளியவர்க்கு  நீ அளித்தால் ...  அதே உவகையோடு பத்து ரூபாய் பத்தாயிரம் ரூபாய் என செல்வத்தோடு செல்வமாய் பதினாறு செல்வங்களும் தான் பெற்று , சிறந்த வாழ்க்கை பயன்  அடைவதற்கு வழி செய்வான் எம்பெருமானே.

அதிகாலை துயிலெழுந்து ,பக்தி என்னும் வைராக்கியம் வைத்து, அன்பு எனும் பாசுரம் பாடி , எம்பெருமானே ! நின் பாதம் சரணம் ! என வழிபட்டால் ஆண்டாளின் அன்புக்கு கட்டுப்பட்டு காட்சியளித்த  கண்ணனவன் நம் இல்லத்திலும்  கண்டிப்பாக எழுந்திருப்பான் . நமக்கும் காட்சி தருவான் .ஆசி கொடுப்பான் அருள்புரிவான் .

அதிகாலை துயிலெழுந்து திருப்பாவை பாடி  எம்பெருமானை அழைத்து மார்கழி சிறப்பை நிறைவுபடுத்தி பிறந்த பயனை பூர்த்தி செய்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக