வெள்ளி, 7 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் 23

 ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் 23


மாரிமலைமுழஞ்சில்மன்னிக்கிடத்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டுபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடையசீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்தகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாடலின் விளக்கம்

இந்தப் பாடலை சிங்கத்திற்கு இணையாக கண்ணனை ஒப்பிட்டுப் பாடுகின்றாள்.  ஆண்டாள் மழைக்காலம் மிகப்பெரிய மலை. அதில் ஒரு குகை .  அந்த குகைக்குள்  காட்டுக்கு அரசன் எனும் பெருமை கொண்ட சிங்கம் விழித்து எழுந்து கண்களில் நெருப்பு பொறி பறக்க நாற்புறமும் பிடரி மயிர் சிலிர்த்து எழுந்து நடமாடி நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையோடு மிகப்பெரிய கர்ஜனை செய்தவாறு வெளியே வருகின்றது.  அதேபோன்று காயாம்பூ நிறத்தை உடைய எங்கள் கண்ணா நீ விழித்தெழாய்!

நீயும் வீரநடை போட்டு கோவிலை விட்டு வெளியே வருக . எங்களுக்கு அருள் செய்க.  மிக அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அரியாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்ததற்கான காரணத்தை அறிந்து கோரிக்கைகளை பரிசீலனை செய்து எங்களுக்கு அருள் செய்க.

 வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள் செய்வாயாக என்று  கண்ணனை வேண்டி அழைக்கின்றாள்  கோதை.

இங்கு சிங்கத்திற்கு நிகரான கண்ணா!  என  ஒப்பிட்டு  வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றாள் ஆண்டாள்.



அதிகாலை துயிலெழுந்து மார்கழிமாத குளிர் பொழுதில் நீராடி பாவை நோன்பு இருத்தல் என்பது மிக பெரிய கடினம் எனினும் ஆண்டாள் மாதம் முழுதும் ஆயர்பாடி பெண்களையும் தினம் அழைத்து  நோன்பு  மேற்கொண்டு கண்ணனை அழைக்கின்றாள்.

வீரம், விவேகம், முயற்சி ,உழைப்பு ,பக்தி அனைத்தும் சேர்ந்தால்தான் லட்சியம் வெற்றி பெறும் . சிங்கத்திற்கு இணையான கண்ணனுக்கும் இப்படிப்பட்ட செயல்கள் மிகவும் பிடிக்கும். அவனுடைய அருள் நமக்கு கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றாள். 

வீரமும் விவேகமும் கொண்டு வாழ்பவனுக்கு இறைவனின் அருள் நிச்சயம் உண்டு என்று திருப்பாவை 23 ஆம்  பாசுரத்தில் பறைசாற்றுகின்றாள்  கோதை.



சூரியன் உயிர்த்தெழுந்த காலைப் பொழுதில் ,  துணை பற்றியபடி மங்கையவள் நிற்க ,  உன் மகன் எங்கே!  என தெருவழியே சென்ற மலர்விழியாள் (காதலி) கவிபாட ...என் வயிற்று சிங்க குகையில் (கருவறையில்)  இருந்து வெளியேறிய என் மகன் எங்கே இருப்பான் ! போர்க்களத்தில் சென்று பார் சிங்கமாய் சீறிப் பாய்ந்து எதிரிகளை வீழ்த்தி கொண்டிருப்பான் என பெருமையோடு சொன்ன மாதர்குல பெண்ணை பற்றிய வீர வரலாறு சங்ககால இலக்கியத்தில் நான் படித்ததுண்டு. அதுவன்றோ வீரம்! அதுவன்றோ தமிழரின் பண்பாடு! அவ்வழியில் வந்த நாம் வீர நடை போட்டு உழைப்பு எனும் வாளேந்தி  எதிரி எனும் சோதனைகளை முறியடித்து நெஞ்சை நிமிர்த்தி இறைவனை வழிபட்டால் உய்யுருகி மெய்யுருகி   வாழ்த்தி அருள்புரிவான் எம்பெருமான் நாராயணன் என்பது திண்ணம்.



நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக