ஞாயிறு, 9 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 25

 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் -  25



ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பொருள் விளக்கம்


 தேவகியின் மைந்தனாக நள்ளிரவில்பிறந்த எங்கள் பெருமானே ! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்று மலர்ந்தவனே! 

அவ்வாறு மறைந்து வளர்வதை பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்றல்லவோ  நினைத்தான்!  அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! 

உனது அருளை யாசிக்க நாங்கள் வந்திருக்கின்றோம். அந்த அருளைத் தந்து அருள்வாயாக ! உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடும் அழகை தாங்கள் பார்க்க வேண்டாமா!  பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம். கண்ணா  எழுந்திருப்பாயாக என்று ஆண்டாள் எம்பெருமானை  தம்முடைய திருப்பாவை பாசுரம்  பாடி அழைக்கின்றாள்.

தவறு செய்பவன் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது  நியதி .  

"தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தான் நேரிடும்  உன் மரணம்" இது அசரீரி வாக்கு . கேட்டதும் அதிர்ந்து போனான் கம்சன்  

பாதத்தில்  முள் பட்டாலே துடித்துப் போகும் ... உயிருக்கு உயிராய் வளர்த்த தங்கை தேவகியின் மகனால் தன உயிருக்கு ஆபத்து என தெரிந்த   அடுத்த கணமே .‌‌..தேவகி, வசுதேவர் இருவரையும் சிறைவைத்தான்.  அடுத்தடுத்த பிறந்த குழந்தைகள் அனைவரும் கம்சன் கொடூரமாக கொல்கின்றான்.

8வது முறையாக கர்ப்பமுற்றாள்  தேவகி.  

நடப்பதெல்லாம் நன்மைக்கே எனும் கோட்பாடு மனதில் எழுந்துவிட்டால் நடந்த சோகங்கள் காணாது புத்துணர்ச்சி காண்பது என்பது திண்ணம்.

தேவகிக்கு குழந்தை பிறக்கின்றது உடனே வாசுதேவர் புறப்படுகின்றார். கொட்டும் மழையில் குழந்தையை தூக்கிக்கொண்டு கோகுலம் நோக்கி....

ஆச்சரியம் அதிசயம் அளவளாவும் ஆனந்தம் அன்று நடந்த நிகழ்வு. குழந்தையை வசுதேவர் தூக்கிய கணம்... சிறை கதவுகள் தானாக திறக்க ,காவலாளிகள் கண்ணயர்ந்து போக, நாத கானம் இன்னிசை பாட சந்திரன் வாழ்த்துமடல்  கூற, நட்சத்திரக் கூட்டம் பிரகாசமாய் ஒளிக்கற்றை வீச , தேவலோகம் திரண்டுவந்து பூ மழை தூவ...



பிறந்த மழலை‌ சிரிக்கின்றான் தெய்வீக  சிரிப்பால் அனைவரும் வசமாக, பிஞ்சு கால்களோ ஜதிதாளம் போட,  பஞ்சு போன்ற கைகள் இதழில்  பட்டு அசைந்தாட,  தந்தையின் கையில் தவழ்ந்தபடி செல்கின்றான்  அழகாய் அசைந்தபடி  செல்கின்றான் கோகுலம் நோக்கி.

கொட்டும் மழை கண்டும் மனம் தளராத வசுதேவர் பத்திரமாக குழந்தையின் கொண்டு சேர்க்கும் பொருட்டு நடக்கையிலே... தெய்வ குழந்தையை காப்பதற்கு ஆதிசேஷன் ஐந்து தலை நாகமாய் படமெடுத்து   மழையிலிருந்து காத்து  தொடர்ந்து அசைந்து வர,  மிக அழகாய்  அலைகடல்,  பாதை அமைத்து வழிவிட்டு மகிழ்ச்சி பெற ,கோகுலத்தை அடைகின்றான் கண்ணன்.


புண்ணியம் கண்ட நம் மனமெலாம் ஆனந்தம் கரை புரண்டோட ,மகிழ்ச்சி அளவளாவ கிருஷ்ணன் பிறந்த கதை கேட்டீரோ!  கேட்டால் மட்டும் போதாது ஆவணிமாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவன் கண்ணன். அந்தநாளே கிருஷ்ண ஜெயந்தி  என கொண்டாடக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த நன்னாள்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம்‌... திருப்பாவை பாடலில்

கிருஷ்ணன் பிறந்த நாளை மிக அழகாய் நினைவுபடுத்துகிறாள் ஆண்டாள்.

இந்த மார்கழி மாதத்தில் இந்த பாசுரத்தின் மூலமாக கண்ணனின் கதையையும் பிறந்த வரலாறு தனை கேட்டு மகிழ்ந்தோம். வாழ்வினில் இதுபோன்று இன்பம் உண்டோ !  என நெகிழ்ந்து தெய்வத்தின் வாழ்த்து தனை தாம் பெற்று வாழ்ந்த பயனை நிறைவு செய்வோம் .

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக