திங்கள், 10 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல்- 26

 

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம்பாடல் -  26



மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துன்பாஞ்சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்:

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட பரந்தாமா! நீலக்கல் நிறத்தை கொண்டவனே‌‌!   பெரிய கடலில் ஆலிலையில் அழகாய் மிதப்பவனே!

மங்கல இசையில் இறைவனை வரவேற்று இசைந்தே மகிழும்  பெரியவர்கள் கடைப்பிடித்து வரும் மார்கழி நோன்பு இருந்து  கண்ணனை
அழைக்கின்றோம்.  அன்று உலகமே அசரவைக்கும் நாத ஒளியும் , வெண்ணிறம் கொண்ட பால் சாதம் போன்ற பாஞ்சசன்யம் எனும் வலம்புரி சங்கு முழங்க.. பெரிய முரசுகள் ஒலிக்க , பெரியவர்கள் படைசூழ,  மங்கள தீபங்கள் சுடர் விட்டு எரிய,  உன் திருப்புகழ் பறைசாற்றும் கொடிகளும் அசைந்தாட , எங்களுக்கு காட்சிதர எம்பெருமானே நீ எழுந்திராய்!

இந்த நோன்பு இனிதே நடைபெற இடமளித்து  அருள்வாயே எங்கள் கண்ணா!  என்று கண்ணனை  அழைக்கின்றாள்  கோதை.

ஒரு நோன்புக்கு மிக முக்கியத்துவம் இருக்கும் இடம்  தெய்வீக இடமாக அமையவேண்டும். என்பதை தன்னுடைய பாடல் மூலமாக நமக்கு அறிவுறுத்துகின்றாள்‌  கோதை.

பாஞ்சசன்யம் எனும் சங்கு கடலில்  கிடைக்கக்கூடிய மிக அரிய வகை சங்கு என்பதை அறிவீரோ!   ஆனால் எளிதில் கிடைக்க படாத மகத்துவம் கொண்டது. ஆயிரம் இடம்புரி சங்கின்  சங்கமத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும்.

திருமாலின் கையிலிருக்கும் வலம்புரி  சங்கிற்கு , பிரணவ மந்திரத்தின் ஒளிற  வாழ்க்கைக்கு பிரகாசம் கொடுக்கக்கூடிய சக்தி, செல்வ செழிப்பு வாழ்க்கையில் நிம்மதி பெறக்கூடிய  அனைத்து  சக்திகளும் உண்டு. அவை அனைத்தும்  நாம் பெற வேண்டுமா!



அந்த மகிழ்ச்சி தரக்கூடிய வலம்புரி சங்கு பூஜை அறையில் வைத்து வழிபடுவோர் வாழ்க்கை என்றும் சுபிட்சம்  தரும். தெய்வீக இடமாக அமைவதற்கு இதுவே ஒரு சிறந்த சாதனம்  என்பதை இந்த திருப்பாவையில்  மிக அழுத்தமாகவே  பாடுகின்றாள் ஆண்டாள்.

  வலம்புரி சங்கின் ஸ்ரீ ஓம் என்ற ஓங்கார சமுத்திரத்தில் நாம் கரைந்து விட்டால் துன்பமேது ! துயரமேது! தோல்விதான்  ஏது!  என்றும் வாழ்க்கை ஜெயமே என்பதுதான் இந்த வலம்புரி சங்கின் மகத்துவம். என்பதைத் தெளிவு படுத்துகின்றாள் ஆண்டாள்.

எம்பெருமானாகிய  கண்ணன் நம்மை விரும்புகின்றானா!  தெரியாது! ‌ நமக்கு அந்த ஆராய்ச்சியும் தேவையில்லை ...நாம் கண்ணனை விரும்புவோம் .கண்ணனை மட்டுமே விரும்புவோம் .  எத்தனை முறை அழைத்தும் வேண்டியும் செவிசாய்க்காது  சோதனை மட்டுமே தருகின்றான் என்று சோர்ந்து விடாதீர்.  ‌



 நாளை நிச்சயம் வருவான்  . திருப்பாவை ஆழ்ந்து படிக்கப் படிக்க  கோதைஅவளுக்கு காட்சி தந்து ஆட்கொண்ட  எம்பெருமான் , நமக்கும் செவிசாய்ப்பான்.   அவன் கைகளில் வீற்றிருக்கும் பாஞ்யசன்யம் எனும் சங்காக நான் ஆகவேண்டும் எனும் ஆழம் மனதில் வேரூன்ற, அடுத்த கணம்‌ நாம் பெருமானின் கையிலே வீற்றிருக்கும்   தெய்வீக சங்காக ,  செய்த பாவங்கள் கரைந்து,  கோடி புண்ணிய பலன்கள் அனைத்தும்  பெற்றவனாக ,  இதுபோதும் இப்பிறவி ! இனியேது மறு பிறவி.. எனும் உவகை கொண்டு வாழ்ந்து வாழ்வின் இனிதான பயனை  நிறைவு செய்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக