ஆண்டாளின் திருப்பாவை
பாசுரம் பாடல் -12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லதாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
மார்கழி பாவை நோன்பு இருக்க இளங்காலை குளிரினில் , திருப்பாசுரம் பாடி ஒவ்வொரு இல்லத்திலும் சென்று தோழியரை எழுப்புகின்றாள் கோதை. ஒரு தோழியின் இல்லத்து வாசல் முழுதும், பால் சுரந்து தரையில் கொட்டிக் கிடக்கின்றது . கீழே பாலின் குளிர்ச்சி மேலே பனியின் குளிர்ச்சி தனை தன் இனிய பாசுரத்தில் பாடியவாறு தோழியை அழைக்கும் அழகு தனை கேளீரோ!
பாடலின் பொருள்...
கன்றின் கரு அறிந்து மடியின் பால்தனை அங்கும் இங்கும் சிதறி ஓட அலைபாயும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே!
கீழே சில் எனும் பாலின் குளிர்ச்சி மேலே உடல் நடுங்கும் பனியின் குளிர்ச்சி தனில் நாங்களோ பால் சேறுதனில் வெளியே காத்திருக்க குரல் கேட்காது இன்னும் உறக்கம் ஏனோ! எழுந்து வெளியே வருவாயாக என்று தன் தோழிக்கு குரல் கொடுக்கின்றாள் கோதை.
சீதையை சிறைப்படுத்த இராவணன் பால் கோபம் கொண்டு ராம அவதாரம் எடுத்த எங்கள் பரந்தாமன் நாராயணனின் புகழ் நாங்களோ பாடி கொண்டிருக்க ...நீயோ எதுவும் பேசாது எதைப்பற்றியும் கவலைப்படாது இன்னும் உறங்குவது ஏனோ! எழுந்து வெளியே வருவாயடி ! என தன் தோழியை பாடி அழைக்கின்றாள் கோதை .
நம்முடைய அறிவை அகக் கண்ணைத் திறப்பதற்கு திறவுகோலாய் அமைவது திருப்பாசுரம்...
ராவணன் பால் கோபம் கொண்டு...என்று இந்தப் பாசுரத்தில் கோதை குறிப்பிடுவது ஏன்! ராமனின் முகம் கோபம் கொண்டு நாம் பார்த்ததுண்டா!
நாடாள்வேன் -காடாள்வேன்* இரண்டு நிலைகளிலும் ராமரின் முகம் மலர்ந்தே இருந்தது .எப்போதும் ராமரின் முகம் தாமரை மலர் போன்று மலர்ந்தே இருக்கும் என்கின்றது கம்ப ராமாயணம்.
ராமனின் கோபம் என்று சொன்னால் அது தவறு என்று சொல்வதற்கு, தோழி விரைந்து எழுந்து வருவாள் என்பதற்காக திருப்பாசுரத்தில் 'சினத்தினால் தென் இலங்கை கோமானை' என ராமனைப் பற்றி அப்படி சொன்னாளோ! என்ற ஒரு சந்தேகம் எழுகின்றது.
ஒரு தவறு , அநியாயம் நேர்ந்தால் ஏற்படும் கோபம் கொள்வதை தவிர்த்து நிதானமாக தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர கோபமும் ஆர்ப்பாட்டமும் கூடாது எனும் கருத்தினை மனதில் வைத்து, நினைத்த காரியம் இனிதாக முடிய அதிகாலை துயிலெழுந்து திருப்பாவை நோன்பிருந்து திருப்பாசுரம் தினம் பாடி அகமகிழ்வோம் . வாழ்வில் வாழ்ந்த பயனில் நிறைவு காண்போம்
விதி என்பது நம் வசம் கொண்டு ஏற்றுக்கொண்டு அதன் வழியில் நாம் சென்று .. அகமும் முகமும் சமநிலை கொண்டு நேர்வழிப் பாதையில் நடந்து சென்று மதி வசத்தால் விடை கண்டு வெற்றிவாகை சூடுவோம். சங்கு சக்கர கையில் ஏந்தி அற்புதமாய் காட்சி தரும் எம்பெருமான் நாராயணனின் ஆசியும் அருளும் நாம் பெறுவோம்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக