ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னைபிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
பொருள் விளக்கம்:
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா நாங்கள் அறிவிலா பேதைப் பெண்கள் .எங்களுக்கு என்ன தெரியும்! பசுக்களின் பின்னால் சென்று பசு தனை மேய்த்து தயிர் சாதம் உண்ணும் பெண்களாகிய எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நின் திருமுகமே கண்ணா ! எங்களை பார்ப்பதற்கு எழுந்திராய் என்கின்றாள் திருப்பாவையில் கோதை.எங்களுக்கும் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரியும் பரந்தாமா உமையே நினைத்து உமையே தலைவனாக ஏற்றுக் கொண்டு உன் வழியே செல்கின்ற எங்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம் பெருமானே!
உன்னை நினைத்த பலன் பிறவிப் பயன் அடைந்த திருப்தி பெற்றோம் வைகுண்டா! என்று மகிழ்ச்சி மேலோங்க கண்ணனை அழைக்கின்றாள் கோதை.
உன்னோடு எங்களுக்குள் உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடம் உள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக என்று எம்பெருமான் கோவிந்தனை அன்போடு அழைக்கின்றாள் கோதை.
உயர்வு தாழ்வு நிலை இல்லா அனைவரையும் சமமாக பார்ப்பவன் இறைவன் என்பதை இந்தப் பாசுரத்தில் தெளிவுபடுத்துகின்றாள் கோதை .
அறிவிலா மாடு மேய்க்கும் தயிர்சாதம் உண்டு வாழும் நிலை இருந்தாலும் ஸ்ரீனிவாசனை நினைத்து விட்டால் போதும் ! பிறவிப்பயன் அடைந்த திருப்தி பெற்று வைகுண்ட பதவி நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்கின்றாள் ஆண்டாள்.
உண்மைதானே!
பால் வடியும் குழந்தையின் முகம் தனிலே- சாதி மத பேதமை பார்ப்போமா !தினம் வணங்கும் தெய்வத்தின் முன்தனிலே - ஜாதி மத பேதமை பார்ப்போமா !அன்பு கனிந்த தாயின் அகம் தனிலே -ஜாதி மத பேதமை பார்ப்போமா !பண்பிலே சிறந்த நம் மனதினிலே ஜாதி மத பேதமை பார்ப்போமா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக